புதுமைப் பெண்ணே புதிய முடிவெடு!
(ராஜலக்ஷ்மி கல்லூரிக் கவியரங்கம் சார்பு, கோவை)
09/08/2017
புதுமைப் பெண்ணே புதுமைப் பெண்ணே
புரட்சிப் புவியில் வாழ்கிறாய் - மின்னும்
பொன்னும் பொருளும் மடமை என்றே
உலகில் அணிவதை விடுக்கிறாய் - சொல்லும்
சொல்லில் கூரிய அம்பை வைத்து
வையம் இளையரை வளர்க்கிறாய் - வெல்லும்
வழிமுறை வேலை யாற்றியே அல்லும்
பகலும் வாழ்வில் உயர்கிறாய் - சகமே!
தூண்டும் பரப்பில் துண்டு நிலத்தில்
தூங்கா விழியுடன் எழுகிறாய் - செல்லப்
பிள்ளை முகராமல் செங்கீரை உண்ணாமல்
புத்தகப் பாரில் மலர்கிறாய் - வண்ணப்
பூக்கள் சூடாமல் சட்டைப் பேண்ட்டில்
பலதேசஞ் சுற்றிப் படிக்கிறாய் - சிக்கனம்
மறந்துச் சேமிப்பு இன்றிச் சிலகால
பூமியில் தனித்துப் புண்ணியம் - விடுத்தே!
பிள்ளையர் எங்கே நல்வாழ்வு எங்கே
பசுமை எங்கே பாரதம் - எங்கே
மரபு எங்கே மாண்பு எங்கே
மகிமைத் தரணியில் மன்னவர் - எங்கே
விடுதியிற் சேர்ந்தே விண்மீன் கூட்டம்
கடமை வெறியில் நானிலம் - விற்றே
நல்லதை அழித்து நாடுமே காண
வல்லமை வளர்த்து வாழ்வாய் - பெண்ணே!
பழமைப் போற்றிய ஒளவைப் பாட்டி
புனிதங் காத்துப் பல்லுலகு - வாழ்த்த
வளர்ந்த நோக்கில் வசந்தம் வீழ்த்தி
வளரும் பிள்ளாய் புவனங் - கருக்க
எருக்கம் பார்த்தும் இறுக்கம் ஆனாய்
எம்மதிப் பெண்ணே மதியுலகு - காணே
அடிமை மதியழிவு மேன்மோகக் கீழ்க்குணம்
கயமை வலம்வரச் சரியாம் - பாரே!
அழகே அமுதே அன்னக் கொடியே
வையமே வாழ வாழவே - முடிவெடு
இணையே துணையே இன்பக் கனியே
சகமே தழைக்கச் சடுதியில் - முடிவெடு
உளமே உணர்வே உண்மைச் சுவையே
உலகமே உய்ய உன்னத - முடிவெடு
பெண்டுப் பிள்ளை வீடுநீள் அகிலம்
பெருமைப் பீடுறப் புதிய - முடிவெடு!!
-கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா.
கோவை, 07/08/2017.
No comments:
Post a Comment