Tuesday, December 1, 2009

கடற்கரை!

கடற்கரை ஓரத்தில் கலங்கரை விளக்கம்
காலாற நடந்தோரின் கவிபாடுது!
மற்கோட்டை கட்டியச் சிறுபிராயம் முதலாக
மதிமயங்கி தோற்றோரின் நிழல்காட்டுது!
சிந்தனைச் சிற்பிகள் வடித்தக் கதைகளை
சிந்தாமல் சிதறாமல் குறிகாட்டுது!
ராகமும் தாளமும் கலந்த நாட்களில்
ரகசியம் பேசிய விதங்காட்டுது!
பட்டொளி வீச்சில் பயிற்சிகள் செய்து
பல்லவன் வடித்த எழில்காட்டுது!
நிலவொளி வட்டிலில் நிலாச்சோறு உண்ட
நெடுங்கால நினைவினை அகங்காட்டுது!
கடலோரப் பாறையில் சுனாமிச் சுரங்கம்
கண்ணெதிர்ச் சோகத்தைப் புறங்காட்டுது!
சிறுகூடல் சிறுவூடல் உணர்ச்சிப் புதையலை
சில்லிடும் கடற்காற்று நிறங்காட்டுது!
தளிர்கொடி இடையாள் துயரால் மெலிந்து
துணிவுடன் வீழ்ந்த இடங்காட்டுது!
தாடி மன்னர்கள் குவளை ஏந்தி
தன்னலம் குன்றிடும் நலங்காட்டுது!
கடற்கரை ஓரம் சிங்க ராஜா
கம்பீரம் காட்டிச் சிரிக்கும் ஒளிகாட்டுது!
கவிச்சோலை அரங்கில் கூடலூர் கவியொலி
கடற்கரைக் காட்சியின் புகழ்காட்டுது!!!!!!

No comments:

Post a Comment