Wednesday, December 9, 2009

டிசம்பர் பூக்கள்!

குத்து விளக்கேற்ற புதுமனை புகுந்தாள்
குலமகள் நடையினைக் குறிப்பாக இசைத்தாள்!
அத்தான் சகோதர முறைகளை அறிந்தாள்
அத்தை மந்திரக் கட்டுப்பாடு பயின்றாள்!
துடிப்புடன் முதலாம் திங்கள் கடந்தாள்
துணைவன் தங்கைக்கு திருமணம் முடித்தாள்!
இரட்டிப்பு மகிழ்ச்சி கருணைப் பூண்டாள்
இல்லறம் சிறக்க நல்லறம் புரிந்தாள்!
சிப்பிக்குள் சுமந்த நல்முத்தை நுகர்ந்தாள்
சிலிர்த்து மல்லிகைப் பூச்சூடி முடிந்தாள்!
நல்லவன் தம்பிக்கு பணிவிடை செய்தாள்
நம்பிக்கை புகட்டி வேலையில் சேர்த்தாள்!
ஐந்தாம் திங்கள் அமுதம் சமைத்தாள்
அவர்குலச் சுற்றத்தார் புடைசூழச் சென்றாள்!
அய்யனார் கோவிலில் வழிபட்டு நின்றாள்
அறவோர் வாழ்த்த ஆசிகள் பெற்றாள்!
ஆல்போல் தளைத்த குடும்பம் என்றாள்
அறுசுவை அனைத்தும் சுவைத்து மகிழ்ந்தாள்!
ஏழாம் திங்கள் வளைகாப்பு ஏற்றாள்
எழில் மங்கை இடைசுமந்து வளைந்தாள்!
கடமை கண்ணியம் பரிபூரணம் அணிந்தாள்
குழந்தைப் பேறுக்கு தாய்வீடு நுழைந்தாள்!
புதுமணப் பெருமை புகழோடு திகழ்ந்தாள்
பதமறிந்து நவரசப் பாக்களைத் தொடுத்தாள்!
பத்தாம் திங்களில் பச்சிலை உண்டாள்
பச்சிளங் கொழுந்தைப் பெற்றெடுத்து பூரித்தாள்!
குறிச்சி மலர் பெயரிட்டு அழைத்தாள்
குளிர்ந்த மனதோடு புக்ககம் வந்தாள்!
வருடம் நகர்ந்த விதத்தை நினைத்தாள்!
வருடி அழைத்தப் பூக்கரம் தழுவினாள்!

No comments:

Post a Comment